திமுக கூட்டணியில் கமல்ஹாசன் – மநீமவுக்கு 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி!

திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது.  அந்த கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.  வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இடம்பெறும் என்று…

திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது.  அந்த கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. 

வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இடம்பெறும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரண்டுகட்ட பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதி மட்டும் கமலஹாசன் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் உள்ஒதுக்கிட்டில் ஒரு தொகுதியைப் பெற்று அதில் போட்டியிடலாம் என்று கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியும் கை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  தனித்து போட்டியிடுவதாக இருந்தால் கோவை அல்லது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக திமுக தலைமை அலுவலகத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும்,  நடிகருமான கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார்.  அப்போது,  இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் ஆகியோர் இன்று (9-3-2024) கலந்து பேசியதில்,  2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதெனவும்;  வரும் 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.