கமல்ஹாசனை ஒரு கட்சியின் தலைவர் அல்ல. ஊழல் கறை படிந்த காங்கிரஸ்- திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கோவை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, பாஜக தேசிய மகளிர்
அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது..
“ தமிழ்நாடு முதல்வர் சட்டம் ஒழுங்கை பற்றி சட்டமன்றத்தில் ஒரு நீண்ட பதிலுரையை கொடுத்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் பட்ட பகலில் நடக்கின்ற படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அமலில் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகளை பார்க்கும்போது, தமிழகம் அமைதி பூங்கா என்ற நிலையிலிருந்து வெகு சீக்கிரமாக கீழே இறங்கி செல்கிறது.
தமிழகம் அமைதிப்பூங்காவாகவே இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து , சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நான் வைத்த கோரிக்கைக்கு கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனை சரியாகும் என்றார்கள் ஆனால் அதற்கான பணிகள் இதுவரை துவங்கியதாக
தெரியவில்லை.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருகிறோம், ஆட்சியை பிடிக்க
போகிறோம் என அரசியலுக்கு வந்தார்கள். ஆனால் கோவையில் தேர்தலில்
போட்டியிட்டு இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அவ்வப்போது வந்து ஒருசில குறிப்புகளை செய்தியாளர்களிடம் கூறி விட்டு செல்கிறார்.
கோவையில் தேர்தலில் நிற்பதும், நிற்காததும் அவரின் விருப்பம் , அவர் முடிவெடுக்கட்டும். ஆனால் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கட்சியை ஆரம்பித்த கமலஹாசன் இன்று காங்கிரஸ் போன்ற ஊழல் கட்சி மற்றும் திமுகவோடு சேர்ந்து கொண்டு மாற்றத்தை கொடுக்கபோகிறேன் என சொன்னால் கமல்ஹாசனின் அரசியல் கணக்கு என்ன..? . எனவே தற்போது கமலஹாசனை கட்சியின் தலைவராக பார்க்க முடியாது. ஊழல் கறை படிந்த காங்கிரஸ் திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக மட்டுமே பார்க்க முடியும். இதுதுதான் தற்போது அவர்களின் நிலை.
கர்நாடக தேர்தலை பொறுத்த வரை பாஜகவின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள்
பிரகாசமாக மாறிக் கொண்டிருக்கிறது. கட்சியிலிருந்து சிலர் பிரிந்து சென்றதால் பின்னடைவு ஏற்படும் என சொன்னார்கள். ஆனால் களத்தில் அவ்வாறு இல்லை. அடுத்த பத்து நாட்களில் உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோர் பிரச்சாரம் செய்கிறார்கள், கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.







