கள்ளக்குறிச்சி சம்பவம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி…

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

 

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்ற ஜாமின் மனுவை நீதிபதி நிராகரித்தார். அதனை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு தள்ளி வைத்து மீண்டும் வழக்கினை விசாரணை செய்து, கைது செய்யபட்ட 5 பேரையும் இன்று 12.30 மணி முதல் நாளை பிற்பகல் 12.30 மணி வரை ஒரு நாள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

 

பின்னர் போலீசார் அவர்களை முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 5 பேருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு நாளை பிற்பகல் வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.