நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி மின் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டாவது நாளாக மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் வனத்துறையினரால் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, குளிர்ச்சியுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக களக்காடு பகுதியில் கோடை வெயில் அதிகம் காணப்படுகிறது.
இதனால் அருவி-நீரோடைகள் வறண்டும், தலையணையிலும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதற்கிடையே தலையணையில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் படி நேற்று தலையணை மூடப்பட்டது. இன்றும் தொடர்ந்து பணிகள் நடைபெறுவதால் 2வது நாளாக தலையணை மூடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—ரூபி.காமராஜ்