‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’; செயல்படுத்த குழு அமைத்து அரசாணை வெளியீடு

ரூ. 1,000 கோடியில் ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை’ செயல்படுத்த குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள்…

ரூ. 1,000 கோடியில் ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை’ செயல்படுத்த குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும். குப்பைகள் உருவாகும் நிலையிலேயே 100 சதவீத பிரித்தலை உறுதிசெய்வதன் வாயிலாகவும், வீடுதோறும் குப்பைகள் சேகரித்தல் மற்றும் 100 சதவீதம் அகற்றுவதன் வாயிலாகவும் நாம் குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவோம் என்றும்,

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

நீர்நிலைகள் மீட்டெடுப்பது, பூங்காக்கள் அமைப்பது, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதி, மரம் நடுதல், பள்ளிக் கட்டிடங்கள், மருந்தகங்கள், நூலகங்கள் மேம்படுத்துவதற்கு அனைத்து நகர்புறங்களிலும் நமக்கு நாமே திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்றும்,

இதற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் நமக்கு நாமே திட்டப் பணிகளில் கணிசமாக பங்களிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும். மக்கள் சேவையில் மாநகராட்சி மற்றும் நமது சேவையில் நகராட்சித் திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படும் என இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திட்டத்தை செயல்படுத்த குழுவை அமைத்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்புக்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.