சென்னை-மாமல்லபுரம் வரை உள்ள சாலை இனி கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு அழைக்கபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், நெடுஞ்சாலை துறையின் பவள விழாவில் இன்று நடைபெற்றது. 75 ஆண்டு பவள விழா நினைவு தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, விழா மலரினையும் வெளியிட்டார்.
நிகழ்வில் பேசிய முதலமைச்சர், “ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தொடர்புடையது சாலைகள். சாலை சரியில்லை என்றால் முதலில் திட்டுவது அரசாங்கத்தைத்தான். அரசிற்கு நற்பெயரையும், அவப்பெயரையும் பெற்று தரவேண்டும் என சொன்னால் அதற்கு நெடுஞ்சாலைத்துறை தான் காரணமாக அமையும்” என்று கூறினார்.
தமிழ்நாடு கட்டமைப்பில் வளர்ச்சி பெற மிக முக்கிய பங்கு வகிப்பது நெடுஞ்சாலைத்துறை தான் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2026 க்குள் தரைப்பாலங்களை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க இருக்கிறோம். முதற்கட்டமாக 648 தரைபாலங்கள் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், சென்னை முதல் மாமல்லபுரம் வரை உள்ள சாலை இனி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார்.







