ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வரவற்றுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடவுள் நம்பிக்கையில்லாத, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்றும், வேற்று தேசத்திலிருந்து வந்த மதங்களை கண்டு பயந்து, நயந்து, மதித்து, பணிந்து நடப்பேன்; இதுதான் தமிழருக்கு எதிரான என் திராவிட மாடல் என்று செய்து காட்டும் அரசு ஆட்சியில் இருக்கிறது.
ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில் அல்லது கோவில்களின் குழுக்களில், தெய்வ வழிபாடு மட்டுமின்றி, அர்ச்சகர்கள் நியமனம் உட்பட அனைத்து வழக்கம் மற்றும் நடைமுறையும் ஆகம விதிப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அர்சகர்கள் நியமனம் தொடர்பாக , கடந்த ஓராண்டாக நடந்துவந்த, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு மிகத்துல்லியம் வாய்ந்தாக உள்ளது. அந்த தீர்ப்பில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும், ஆனால் ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
“நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசு விதிகள் செல்லும் என்று சொல்லியிருப்பது எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லி, இந்தத் தீர்ப்பின் முதல் வரியை மட்டும் வெளியிட்டு அரசும், மற்றும், திமுக, தி.க போன்ற அமைப்புக்களின் நாளேடுகள், அரைகுறை செய்தி வெளியிட்டு, முழுமையான செய்திகளை இருட்டடிப்பு செய்து, வரவேற்றுள்ளன.
தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய, ஐந்து பேர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைவராகவும், இந்த விஷயங்கள் பற்றிய அறிவைக் கொண்ட ஒரு சிறந்த நபர் இருப்பதற்காக சென்னை சமஸ்கிருத கல்லூரியின் செயற்குழு தலைவர் என்.கோபாலசாமி, மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒருவரும், மற்றும் அரசு நியமிக்கக்கூடிய இரண்டு பேரும், உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்ப்பினை மேற்கோள் காட்டி , நீதிபதிகள் கூறியிருப்பது மிகவும் முக்கியமானது “சேசம்மாள் மற்றும் பிறர் மற்றும் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் பிற வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதில் வைகானச சாஸ்திரத்தின் (ஆகம) நூல்களின்படி தகுதியானவர்கள் மட்டுமே கடவுள் திருமேனிகளைத் தொட்டு பூஜைகள் மற்றும் சடங்குகளை செய்ய முடியும். அதேநேரம், சமூகத்தில் துறவிகளாகவோ அல்லது ஆச்சார்யர்களாகவோ அல்லது பிற பிராமணர்களாகவோ உயர்ந்த நிலையில் இருந்தால் கூட, வேறு யாரும் சிலையைத் தொடவோ, பூஜை செய்யவோ அல்லது கர்ப்ப கிரகத்திற்குள் நுழையவோ முடியாது.
ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்கள் குறித்து விரிவான விவாதத்திற்குப் பிறகு, சிலையைத் தொடுவதற்கு, ஆகமங்களின்படி ஒருவர் அங்கீகரிக்கப்படாவிட்டால், அத்தகைய நபர் அர்ச்சகர் அல்லது கோவில் பூசாரியாக நியமிக்கத் தகுதியற்றவர் என்ற துல்லியமான தெளிவுடன் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது,” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அர்ச்சகர் நியமனம் தொடர்பான எதிர் மனுவில் எஞ்சியிருக்கும் பிரச்சினை குறித்து பெஞ்ச் குறிப்பிட்டது, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் மற்றும் பிறர் மீதான வழக்கில் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் நிர்வகிக்கப்படும்.
ஆகமவிதிகளின்படி அர்ச்சகர் நியமனம் செய்யப்படாவிட்டால், அதைச் கேள்வி கேட்க தனிநபருக்கு சுதந்திரம் உண்டு, இருப்பினும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை (HR&CE) அல்லாமல், அறங்காவலர் அல்லது தகுதியான நபரால் செய்யப்படும் நியமனம், 1959 சட்டத்தின் விதிகளை மீறும் என நீதிமன்ற அமர்வு எச்சரித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நம் தமிழர் மரபுக்கும், தமிழர் மாண்புக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழர் வாழ்வியல் முறையை, திராவிட மாடலாக ஆக்கமுடியாது என்று இந்தத் தீர்ப்பு திடவட்டமாகக் கூறியிருக்கிறது. நீதிமன்றத்தின் இத் தீர்ப்பினை தலைவணங்கி வரவேற்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







