மூட்டு வலி போனால் போதும், என்ற கவலையுடையவர்கள் ஏராளம். அவர்களின் கவலையைப் போக்கும் வகையில் சித்த மருத்துவர் அமுதா சில ஆலோசனைகளை நமக்கு வழங்குகிறார்.
மூட்டு வலி இன்றைய காலகட்டத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு நோயாக உள்ளது. உடலில் கால்சிய சத்து குறைவதும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதுமே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்த மூட்டு வலி அதிக அளவில் வயதானவர்களுக்கே ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த பாதிப்பு இளம் வயது உடையவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால், அது உடல் பருமன் அதிகரித்துக் காணப்படுபவர்களுக்கே பாதிப்பை உண்டாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூட்டு வலியிலிருந்து முழுமையாகக் குணமடையச் சித்த மருத்துவர் அமுதா சொல்லும் டிப்ஸ்:
இளம் வயதிலேயே மூட்டு வலி வரக் காரணம் உணவு மற்றும் வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே எனக் கூறும் சித்த மருத்துவர் அமுதா, மூட்டுகள் தேய்மானம் ஏற்படாமல் தடுப்பது ’மூட்டுறைப்பாய திரவம்’ எனவும், உடல் எடை கூடும் போது மூட்டுறைப்பாய திரவத்தின் அளவு குறைந்து மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார். மேலும், மூட்டுகள் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கு வைட்டமின் D3 மற்றும் கால்சியம் அவசியம் எனக் கூறும் அவர், இவை இரண்டும் சூரிய ஒளியில் மிகுதியாக உள்ளது எனத் தெரிவிக்கிறார். கம்பு, ராகி, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், இவற்றைச் சாப்பிடுவதன்மூலம் மூட்டு வலி வராமல் தடுக்கலாம் எனச் சித்த மருத்துவர் அமுதா கூறுகிறார்.








