தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுகவும் பாஜகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் பூலித்தேவன் பிறந்த தின விழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த பாஜக தமிழ்மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு மக்களுடைய பழக்கங்களையும், உணர்வுகளை மதிக்கக் கூடிய வகையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விநாயகர் ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறும்போது முந்தைய முதலமைச்சர் பெயர்களில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நடைமுறையை இந்த அரசாவது கைவிட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் சட்டப் பேரவையில் எடுத்துக் கூறியுள்ளார். எனவே அரசு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் நலனுக்கான விஷயங்களில் பாரதிய ஜனதா கட்சி அதிமுக இடையே ஒரு ஒருங்கிணைப்பு தொடர்ந்து இருந்து வருகிறது இது வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றார். பின்னர் அங்கிருந்து தென்காசி புறப்பட்டு சென்றார்.







