கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்த நிலையில், வங்கிகளில் உள்ள நகைகளை ஆய்வு செய்து தினந்தோறும் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இந்த நிலையில், பல மாவட்டங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவ்வாறு விதிகளை மீறி பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 5 சவரனுக்கு அதிகமாக விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களின் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நகைக்கடனை வசூலிக்கவும், தவணை தொகையை கட்ட தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தற்போது நகைக்கடன்கள் குறித்த ஆய்வினை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 100% நகைக்கடன்களை ஆய்வு செய்ய ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தற்போது நாள் தோறும் 250 முதல் 300 பாக்கெட்டுகள் நகைகளை ஆய்வு செய்யவும் ஆய்வு தொடர்பான அறிக்கையை தினந்தோறும் மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கவும் கூட்டுறவு சங்க அனைத்து மண்டல மேலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.









