குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்தில் முடிவுக்கு வர உள்ளதை அடுத்து, அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதேபோல், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(என்டிஏ) அங்கம் வகித்து வரும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு), கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை ஆதரிக்குமா என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காரணம், 2012ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, என்டிஏ-வில் ஜேடியு இடம் பெற்றிருந்தது. அப்போது அக்கூட்டணியின் வேட்பாளராக பி.ஏ. சங்மா நிறுத்தப்பட்டார். அப்போதைய ஆளும் கூட்டணியாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்(யுபிஏ) வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டார்.
என்டிஏ-ல் இடம் பெற்றிருந்தபோதும், கூட்டணி வேட்பாளரான பி.ஏ. சங்மாவுக்குப் பதிலாக எதிர் தரப்பு சார்பில் நிறுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜியையே ஜேடியு ஆதரித்தது.
இதேபோல், 2017ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின்போது யுபிஏ கூட்டணியில் இருந்தது ஜேடியு. அந்த கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மீரா குமார் நிறுத்தப்பட்டார். அவருக்குப் போட்டியாக என்டிஏ கூட்டணி வேட்பாளராக அப்போது பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த நிறுத்தப்பட்டார். இம்முறை, ராம்நாத் கோவிந்த்தை ஆதரித்தது ஜேடியு.
கடந்த 2 தேர்தலின்போதும் கூட்டணியை கருத்தில் கொள்ளாமல் வேட்பாளரையே கருத்தில் கொண்டு ஆதரவு அளித்த கட்சி ஜேடியு.
இந்த முறை அதன் ஆதரவு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
எனினும், இம்முறை என்டிஏ வேட்பாளரையே ஆதரிப்போம் என தெரிவித்திருக்கிறார் ஜேடியு செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி. கடந்த இரண்டு முறையும் வேட்பாளரை கருத்தில் கொண்டே தாங்கள் ஆதரவு அளித்ததாகத் தெரிவித்துள்ள அவர், ஆனால், இம்முறை எதிர்க்கட்சிகள் எங்கே இருக்கின்றன என கேள்வி எழுப்பியுள்ளார். என்டிஏ கூட்டணியில் இருப்பதால், கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கே தங்கள் ஆதரவு இருக்கும் என்றும் தங்கள் கூட்டணி ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.