ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக் காது’ என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைத்திருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.







