விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தை அடுத்த காணை, கஞ்சனூர், கக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து கக்கனூரில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று என்று கூறினார். நாகப்பட்டினத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஏற்கனவே மீன்வளப் பல்கலைக்கழகம் உள்ளதால், விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் விவகாரம், ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்யும் செயலாக கருத முடியாது என குறிப்பிட்டார்.
ஜெயலலிதா பல்கல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது என்பது கல்வி வளர்ச்சிக்காக எடுக்க முடிவு என்ற அமைச்சர், பெயருக்காக மட்டுமே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அதிமுகவினர் ஆரம்பித்து வைத்துவிட்டு சென்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.







