ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் கடந்த 2 ஆம் தேதி காணாமல் போனதாக அவரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கடந்த 4 ஆம் தேதி திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து சந்தேக மரணபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக அவர் இறந்துகிடந்த இடத்திலிருந்து விசாரணையை துவங்கிய சிபிசிஐடி போலீஸார், ஜெயக்குமாரின் குடும்பத்தாரிடம் விசாரணையை முடித்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நண்பர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.