மின் கட்டண உயர்வு: ஜெயகுமார் கண்டனம்

தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது…

தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு
தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

காவல் துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறி
செயல்பட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணையில் இன்று ஆஜர் ஆகிய பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தனது கைதின்போது உடைமாற்ற அனுமதிக்கவில்லை. நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். மருந்து மாத்திரைகள் எடுக்க அனுமதிக்கவில்லை.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதிகள் இல்லாத பூந்தமல்லி சிறையில் கொசுக்கடிக்கு இடையில் அடைத்தனர். 2 நாட்கள் அங்கேயே வைத்தனர். இப்படி பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கே பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றன. எனவே, இதுதொடர்பாக 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எதிர்கட்சி துணைத் தலைவராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அதனை தற்போது அறிவித்துள்ளனர். சபாநாயகர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துதான் ஆக
வேண்டும் என்றும் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் கடிதம் தரலாம். ஆனால், அதிகாரமும், அங்கீகாரம் யாரிடம் உள்ளதோ அவர்கள் சொல்லுவதைத்தான் சபாநாயகர் கேட்க வேண்டும். மேலும், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தெரிவித்தது. அதற்காக நாங்கள் பயப்படவில்லை. கட்டணத்தை உயர்த்தவில்லை. மாறாக நாங்கள் சலுகையை அறிவித்தோம். ஆனால், தேர்தல் நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என தெரிவித்த ஸ்டாலின் தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவதாக
அறிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் உயர்வால் பொதுமக்கள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
பொருளாதார வல்லுனர்கள் குழு அமைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்கள். அந்த குழு
அமைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அவர்கள் மக்கள் வாழ்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்? அரசு கஜானாவை நிரப்ப அவர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்கள்?. நிர்வாகம் செய்ய தெரியாமல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டு மத்திய அரசு மேல் பழி சுமத்தி வருகின்றனர் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.