‘ஜனநாயகன்’ சென்சார் வழக்கு – மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. இதில் நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5ம் தேதி பரிந்துரை செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.