ஜகபர் அலி கொலை வழக்கு – 5 பேருக்கு போலீஸ் காவல்!

ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகபா் அலி (58). முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரான இவா், கனிம வள கொள்ளை நடப்பதாக அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், கடந்த ஜன ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில்கனிமவள கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிலர் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் கல்குவாரி உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, ராசுவின் மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம்,லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய 5 பேரையும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்கள் ஐந்து பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் காவல் விசாரணைக்கு அனுமதிக்க கூடாது என வாதிட்டார். இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 5 நபர்களையும் 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் விசாரிக்க நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.