காபூல் குருத்வாரா தாக்குதல் – ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காபூலில் உள்ள சீக்கியர்களின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்கும் கார்த்தி பர்வான் குருத்வரா மீது நேற்று பயங்கர…

ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காபூலில் உள்ள சீக்கியர்களின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்கும் கார்த்தி பர்வான் குருத்வரா மீது நேற்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கிகளைக் கொண்டும், கார் வெடிகுண்டை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஒரு சீக்கியர் உள்பட இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஆப்கனிஸ்தானின் கோரசன் மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலில் 50 இந்து சீக்கியர்கள் கொல்லப்பட்டதாகவும், தாலிபான் உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல்வாதி ஒருவர் முகம்மது நபியை அவமதித்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதலில் இருவர் மட்டுமே உயிரிழந்ததும், 7 பேர் காயம் அடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் தற்போது ஆப்கானிஸ்தான் உள்ளது. இந்த தாக்குதலை அடுத்து தாலிபான் தீவிரவாதிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில், சில தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பியோடியதை அடுத்து, தற்போது கார்த்தி பர்வான் குருத்வராவை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.