பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
”காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லம்பட்டிடை என்ற பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டுமென ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஒரே காரணத்திற்கு மின்சாரத்தைத் துண்டித்து அம்மக்களை இருளில் தவிக்கவிட்டுள்ளது திமுக அரசு.
அதிலும் குறிப்பாக அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரையும், அவருக்குப் பேட்டியளித்த மக்களையும் மிரட்டும் தொனியில் கடுமையாகச் சாடும் காணொளி, உடன்பிறப்புகளின் உண்மை முகத்தையும் திமுக என்றுமே ரவுடிகளின் கூடாரம் தான் என்பதையும் மக்களுக்குத் தோலுரித்துக் காட்டுகிறது.
தங்கள் ஆட்சியின் அவலத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பவர்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரிப்பது மட்டுமன்றி, பொதுமக்களின் அடிப்படைப் பேச்சுரிமையையும் பறிக்குமளவிற்குத் துணிந்துள்ள திமுகவின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது”
என்று தெரிவித்துள்ளார்.






