பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தாமதமாகவே தொடங்கின. பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினார்கள். 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இதனையடுத்து கடந்த இருதினங்களுக்கு முன்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 42,519 பேர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவில்லை. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.76% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 31,034 பேர் தேர்வை எழுதவில்லை.
இந்த சூழலில், பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது.
‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்’ எனும் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் இலட்சணம் இதுதான்! தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சி” என விமர்சித்துள்ளார்.








