விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் 2009-ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்து விட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. இந்நிலையில் இன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடனும், மிக நலமுடனும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதாலும், சர்வதேச சூழல் தற்போது தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதாலும் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் கூறினார். பிரபாகரன் விரைவில் தமிழீழம் பற்றிய விரிவான திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக கூறிய பழ.நெடுமாறன், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பிரபாகரன் குடும்பத்துடன் தமக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த பழ.நெடுமாறன், இந்த செய்தியை அவர்களுடைய அனுமதியுடன் தெரிவிப்பதாகவும், மேலும் பிரபாகரன் விரைவில் பொது இடத்தில் தோன்றுவார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பழ. நெடுமாறனின் இந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி நடந்த இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டதாகவும், டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பை முற்றிலுமாக மறுத்துள்ள பிரிகேடியர் ரவி, எதன் அடிப்படையில் பழ.நெடுமாறன் அந்த தகவலை சொன்னார் என்று எங்களுக்கு தெரியவில்லை. போரின் போதே பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறியுள்ள தகவல் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக பதிலளிப்பார் என்றும் இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பழ. நெடுமாறன் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பேட்டியளித்த ஒரு மணி நேரத்தில் ரவி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா










