திருப்பாம்புரம் ராகு, கேது பரிகார தலமான சேஷபுரீஸ்வரர் ஆலயத்தில் ராகு – கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்காவிற்குட்பட்ட திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் ஆலயம் ராகு கேது தலமாக விளங்கி வருகிறது. தென் காளகஸ்த்தி என்று அழைக்கப்படும் திருப்பாம்புரம் அருள்மிகு வண்டார்குழலி உடனுறை அருள்மிகு பாம்புர நாதர் திருக்கோயிலில் ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக (ஏக சரீரமாக) இருந்து இறைவனை பூஜித்து அருள் பெற்றதால் இந்தக் கோயில் ராகு கேது ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
ராகு பகவான் மற்றும் கேது பகவானுக்கு பரிகார தலமாக விளங்க கூடிய. இந்த கோவிலில் (08-10-2023) நேற்று மதியம் சரியாக 3.40 மணி அளவில் இராகு – கேது பெயர்ச்சி நடைபெற்றது.
ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்ச்சி அடைந்தனர். அதனை முன்னிட்டு ஒரே சரீரமாக அமைந்த இராகு கேதுவிற்கு சிறப்பு பூஜைகளும், சந்தனம், பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெளி மாநிலத்தில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜைகள் செய்தனர்.







