மணிப்பூரில் 3 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இணைய சேவை வழங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மணிப்பூரில மைத்தேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. மோதலை தூண்டும் வகையில் சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, மே மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 3 மாதங்களாக, இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பான அனைத்து சிக்கல்களையும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த இணையத் தடையால் அலுவலகங்கள், நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இணைய சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் செல்போன்களுக்கான இணைய சேவை தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாது இணைய சேவையை பயன்படுத்த மேலும் பல கட்டுப்பாடுகளையும் மணிப்பூரை ஆளும் பாஜக அரசு விதித்துள்ளது. ரவுட்டர்கள் மற்றும் சிஸ்டங்கள் வாயிலாக வைஃபை அல்லது ஹாட்ஸ்பாட் சேவைக்கு அனுமதியில்லை. இணைய சேவையை STATIC IP முகவரியுடம் மட்டுமே பயன்படுத்த முடியும். MAC முகவரியானது ISP/TSP உதவியுடன் சிஸ்டம் லெவல் அல்லது ரவுட்டர் லெவலில் உறுதிசெய்யப்பட வேண்டும். உள்ளூர் களநிலவரத்திற்கு ஏற்ப சோசியல் மீடியா தளங்கள் மற்றும் VPN சேவை முடக்க செய்யப்பட வேண்டும்.
பயன்பாட்டில் உள்ள VPN சாப்ட்வேரை நீக்குதல் மற்றும் புதிய சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வதற்கு அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு சிஸ்டத்திலும் ஐடி மற்றும் பாஸ்வேட் தினசரி மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது மாநில அரசு வெளியிடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இணைய சேவையை பயன்படுத்த வேண்டும். மேலும், வன்முறை தொடர்பான செய்திகள் வீடியோக்கள், போலிச் செய்திகள் பகிரக்கூடாது. பகிரப்படும் அனைத்து தகவல்களும், சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படும் என்றும் மணிப்பூர் அரசு எச்சரித்துள்ளது.







