தமிழ்நாடு சர்வதேச அலைச் சறுக்கு ஓபன் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சிவராஜ் பாபு மூன்றாவது சுற்றுக்கும், மகளிர் பிரிவில் கமலி மற்றும் சுகர் சாந்தி இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியுள்ளனர்.
இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைசறுக்கு போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலை சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தமிழ்நாடு சர்வதேச அலை சறுக்கு ஓபன் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் வீரர் ராபர்ட் மகலூனா, தொடரின் அதிகபட்ச ஒற்றை அலை மதிப்பெண்ணை பதிவு செய்து அசத்தியுள்ளார். தனது 5 ஆவது முயற்சியின் போது எழுந்த அலையில், அசத்தலாக அலைச் சறுக்கு செய்த அவர், ஒரே அலையில் 7.25 புள்ளிகள் பெற்று அசத்தியது மட்டுமின்றி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அதே போல ஜப்பானின் ரியோ இனபா ஒரே அலையில் 6.50 புள்ளிகளும், இந்தோனேசியா வீரர் டானி விடியாண்டோ 6.40 புள்ளிகளும் அசத்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர்கள் 16 பேரில், தமிழ்நாடு வீரர் சிவராஜ் பாபு ஒருவர் மட்டுமே மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேலும் மகளிர் பிரிவில் இந்தியாவின் சுகர் சாந்தி பானர்சே மற்றும் கமலி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.