தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறியும் வகையில், அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு அமையும் என “The Rise – எழுமின்” அமைப்பின் தமிழ்நாடு தலைவர் ஜெகத்கஸ்பர் தெரிவித்துள்ளார்.
தி ரைஸ்- எழுமின் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு இணைந்து உலகளாவிய பல தமிழ்
அமைப்புகளின் ஆதரவுடன் வரும் மே மாதம் லண்டனில் மாநாடு நடத்தவுள்ளனர். இதில்
தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்டவர்களுடன் உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 700 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாடு தொடர்பாகத் தூத்துக்குடியில் நடந்த அழைப்பு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சியில் எழுமின் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்கஸ்பர், “1966-ம் ஆண்டு முதல் தமிழ் மொழி வரலாறு, இலக்கியம் சார்ந்த உலகத் தமிழ் மாநாடுகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. ஆனால் சமீப ஆண்டுகளாகத்தான் தமிழர் தொழில் வணிகம், திறன்கள் சார்ந்து உலகளாவிய சந்திப்புகளும் மாநாடுகளும் நடைபெறத்தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்க நிதித் தொகுப்பு உருவாக்குவது, கணினித் துறையில் உலகளாவிய தமிழர் கூட்டமைப்பை உருவாக்கி தமிழர் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்த அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் சிறப்பு அலுவலகங்கள் அமைப்பது என உலகளாவிய தமிழர் வளர்ச்சிக்குப் பன்முக வழித்தடங்களைத் தேடும் முக்கிய நிகழ்வாக லண்டன் மாநாடு அமையவுள்ளது“ எனத் தெரிவித்தார்.
2018-ம் ஆண்டு தொடங்கி அரங்கிலும், இணைய வழியிலுமாக ஆறு உலக மாநாடுகளை நடத்தி தி ரைஸ் – எழுமின் அமைப்பு உலகளாவிய தமிழ்த்தொழிலதிபர்களையும் திறனாளர்களையும் இணைப்பதில் முன்னத்தி ஏராகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.