சென்னையில் இருந்து, இன்று (மே 10) இரவு வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்கலாம் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கண்ட மக்கள் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். சர்வதேச விமான குழுக்கள், ஏவுகணை, வாகனங்கள், விமான செயல்பாடுகளின் பயிற்சி, பொறியியல் மற்றும் மேம்பாட்டு வசதிகள், தகவல் தொடர்பு, சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மணிக்கு சுமார் 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பூமியை சுற்றி வரும் இந்த சர்வதேச விண்வெளி மையம், நாளொன்றுக்கு 15.5 முறைகள் பூமியை வலம் வருகிறது. இந்த விண்வெளி மையத்திற்கு தற்போது வரை கடுமையான பயிற்சி மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் மட்டுமே சென்று வந்துள்ளனர். விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா செல்லக் கூட அனுமதி இல்லை.
இந்நிலையில், இன்று மாலை 7.09 மணியிலிருந்து 7.16 மணி வரை சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா விண்வெளி ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னைக்கு மிக அருகில் 400 கி.மீ. உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்து செல்லும் போது, அதனை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
https://twitter.com/mdrafe07/status/1788928808310972728
அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்த்துள்ளனர். மேலும் பலர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.







