தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
கேப்டன் பவுமா தலைமையிலான அந்த அணி, கேப்டன் பண்ட் தலைமையிலான இந்திய அணியை முதல் டி20 ஆட்டத்தில் வீழ்த்தியது. முதல் ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 211 ரன்கள் குவித்த போதிலும், டேவிட் மில்லர், டுஸனின் அதிரடியால் அந்த ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் நடைபெற்ற 2ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடர்ந்தது தென் ஆப்பிரிக்கா. 2ஆவது டி20 ஆட்டத்தில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் 81 ரன்கள் சேர்த்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் 4 விக்கெட்டை வீழ்த்தியபோதிலும் நமது அணியால் வெற்றி பெற முடியவில்லை.
முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்விக்கு இந்திய அணி சரியாக பந்துவீசாததே காரணம் என்று விமர்சிக்கப்பட்டது. 3ஆவது ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடும் என்ற நிலையில், இந்திய அணி தனது திறமையை காட்டியது.
மூன்றாவது ஆட்டத்தில் வெற்றிக் கணக்கைத் தொடங்குவதற்கு ஹர்ஷல் படேலும், யுவேந்திர சாஹலும் முக்கியப் பங்காற்றினர். கேப்டனாக முதல் வெற்றியை ருசித்தார் ரிஷப் பண்ட். ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும் சாஹல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
எழுச்சி பெற்ற இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை 4வது டி20 ஆட்டத்தில் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நாளை சந்திக்கிறது.
ஏற்கனவே இரண்டு வெற்றிகளைப் பெற்றுவிட்ட தென் ஆப்பிரிக்க இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். அதேநேரம், இந்திய அணி நாளைய ஆட்டத்தில் கட்டாயம் ஜெயித்தாக வேண்டும். இந்திய அணிக்கு இது வாழ்வா? சாவா? ஆட்டம் என்பதால் பரபரப்பு பஞ்சம் இருக்காது.
நாளை இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலையில் ஒளிபரப்பு செய்யவுள்ளது.
–மணிகண்டன்