தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி – பிறந்தநாளன்று சதமடித்த ’கிங் கோலி’!

உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. பிறந்தநாள் அன்று சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழக்காமல் நீடித்தார் கிங் விராட்கோலி. ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த…

உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. பிறந்தநாள் அன்று சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழக்காமல் நீடித்தார் கிங் விராட்கோலி.

ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. இந்தியாவின் ஆதிக்கத்துக்கு அணை போட்டு புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க தென் ஆப்பிரிக்க அணி தீவிரமாக முயலும்.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியது. ஆட்டத்தின் 3.4 ஓவரில் ரோஹித் ஷர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷம்சி தவறவிட்டார். தொடர்ந்து 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, ரபாடா பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அதிரடியாக ஆடி 61 ரன்களை சேர்த்தது.

நிதானமாக விளையாடி வந்த கில் 24 பந்துகளில், 23 ரன்கள் சேர்த்து கேசவ் மஹாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 105 ரன்கள் சேர்த்தது. இன்று 35வது பிறந்தநாளை கொண்டாடும் கோலி தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக 67 பந்துகளில் அரைசதம் விளாசினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் அய்யர், 64 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 87 பந்துகளில் 77 ரன்களை சேர்த்து, நிகிடி பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 17 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 44 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து 13 பந்துகளில் 22 ரன்களை சேர்த்து சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். 48 ஓவர்களில் 300 ரன்களை எட்டியது இந்தியா.

அனைவரும் எதிர்பார்த்ததுபோல் 47வது ஓவரில் விராட் கோலி தனது 49வது சதத்தை பூர்த்தி செய்தார். 49வது ஓவரில் 309 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் இழந்திருந்தது இந்திய அணி. இறுதியாக் 50 ஓவர்கள் முடிவில் 326 ரன்களை குவித்தது இந்திய அணி. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 77 ரன்களும், விராட்கோலி ஆட்டமிழக்காமல் 101 ரன்களும் எடுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.