கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதுள்ள ஆண் ஒருவர் துபாயில் இருந்து கடந்த 13ம் தேதி கர்நாடகாவின் மங்களூருக்கு வருகை தந்துள்ளார்.
அவருக்கு குரங்கம்மை நோயின் அறிகுறி இருந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய தொற்றுநோய் ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில், அவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த வாரம் கேரளாவுக்கத் திரும்பிய நபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறையினருக்கு உதவுவதற்காக தேசிய நோய் தடுப்பு மையத்தில் இருந்து நிபுணர்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இரண்டாவது நபருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நோய் பெரும்பாலும் ஆண்களை மட்டுமே தாக்குவதாகவும், அதிலும் குறிப்பாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட 5 பேரில் மூவர் ஆண் – ஆண் பாலியல் உறவில் இருப்பவர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும், நடுத்தர வயது கொண்டவர்கள்தான் குரங்கம்மையால் பாதிக்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அதிக காய்ச்சல், உடலின் பல பகுதிகளில் கொப்புளங்கள் ஆகியவையே இதன் அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.









