சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைக்கு அரசின் மெத்தனபோக்கே காரணம் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்த பின் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த மாணவியின் பெற்றோர் தெரிவித்த புகாரை முறையாக விசாரித்திருந்தால் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக அந்த தனியார் பள்ளியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், முன்கூட்டியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார். கொந்தளிப்பான, பதட்டமான சூழலை உளவுத்துறை மூலமாக முன்கூட்டியே அறிந்து அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலற்ற நிலையில் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுக அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழைவதாக கிடைத்த தகவலின்படி கொடுத்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், குண்டர்களுக்கும், ரவுடிகளுக்கும் திமுக அரசு பாதுகாப்பு கொடுத்ததாகவும் அதிமுக இடைக்காலப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.







