30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – புழல் அருகே திறப்பு!

சிறைச்சாலைகள் சிறைவாசிகளைச் சீர்திருத்தவே அன்றி பழிவாங்குவதற்கு அல்ல என்ற வாசகத்தை அடிக்கடி படித்திருப்போம்… கேட்டிருப்போம்… ஆனால் அது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்று இன்றைய அரசு சிறைவாசிகளுக்காக பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், வெளியில் உள்ள பெண்களுக்காக மட்டும் யோசிக்காமல்… தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் குற்றங்கள் புரிந்து சிறைகளில் உள்ள பெண்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு அவர்களுக்காக.., அவர்களின் வளர்ச்சிக்காக மத்திய புழல் சிறையில் நவீன வசதிகளுடன் இந்தையாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது… அதுகுறித்த செய்தி தொகுப்பு…

கைதிகளுக்குள் மோதல், சிறையில் போதைப் பொருள்கள் கண்டுபிடிப்பு என்று அடிக்கடி பரபரப்பைப் ஏற்படுத்திய ஓர் இடம் என்றால் அது சென்னை மத்திய புழல் சிறைச் சாலையாகத் தான் இருக்கும். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை என்ற தகுதியுடன் 2006-ம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட சிறைச்சாலைதான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்திய புழல் சிறைச்சாலை. நவீன வசதிகளுடன் 221 ஏக்கர் பரப்பளவில், 300-க்கும் குறையாத தண்டனைக் கைதிகள், 2,003 விசாரணைக் கைதிகள், 150 பெண் கைதிகள் என மூன்றுவிதமான கைதிகளுக்கும் தனித்தனியான சிறைகளுடன் ஒரே நேரத்தில் 3,000 கைதிகளை அடைக்கும் வசதியும் இங்கு உள்ளது. 30 அடி உயரம் கொண்ட புழல்சிறை சுவரின் மீது ஒன்றரை அடி உயரத்துக்கு மின் வேலியும், சிறை வளாகத்தைச் சுற்றி 15 கண்காணிப்புக் கேமராக்களுடன், கண்காணிப்புக் கோபுரங்களும் உள்ளன. புழல் சிறை வளாகத்தில் விசாரணைக்கைதிகள், தண்டனைக் கைதிகள், பெண்கள் சிறை என மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள், தனித்தனி நிர்வாகம் என செயல்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்பேற்பட்ட புழல் மத்திய சிறைச்சாலையில், சிறைத் துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கான பெட்ரோல் பங்க், சென்னை மத்திய புழல் சிறையில் முதல் முறையாக திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர். இந்த பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் மாத வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பெண் கைதிகளும், எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாவும், அவர்களையும் ஊக்கப்படுத்தி நல்வழிப்படுத்திடும் வகையிலும், மேலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய எதுவாகவும், அவர்களுக்கும் பெட்ரோல் பங்க் திறக்க தமிழக சிறைத்துறை முடிவு செய்தது. அதன்படி மத்திய புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்ட முடிவு செய்து, அதன்படி அதிநவீன தொழில்நுட்பங்களுடன் பீரீடம் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகள் நடத்தும் இந்த பெட்ரோல் நிரப்பும் நிலையத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் பெண் சிறைவாசிகள் நடத்தப் போகும் பெண்சிறைவாசிகளை பாராட்டி பரிசளித்து கௌரிவித்தார்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, 1.கோடியே 92 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் பங்க்கில் சூரிய ஒளி மின் வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கூடுதலாக 5 பெட்ரோல் நிலையநங்கள் மதுரை திருச்சி புழல் சிறை உள்ளிட்ட 5 இடங்களில் பெட்ரோல் பங்குகள் நிறுவப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது பெண் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம், பத்தாயிரம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதன் மூலம் சிறையில் இருந்தபடியே அவர்களின் குடும்பத்திற்கு மாத வருமானம் அளித்து சிறையில் இருந்து வெளியே வரும் போது நல்ல தொழிலை தொடங்க அவர்களுக்கு வாய்ப்பாகவும் இருக்கும் என்று கூறிய அவர், முதலமைச்சர் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி சிறைவாசிகளை சீர்திருத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

ஷிப்ட் முறையில் வேலை;

முழுக்க முழுக்க அந்த பெட்ரோல் நிலையத்தில் காலை நேரத்தில் பெண் சிறைவாசிகள் மட்டுமே பணியமர்த்தப்படுவர். மொத்தம் இரண்டு ஷிப்ட் வாரியாக பணிகள் பிரிக்கப்பட்டு, காலை நேரத்தில் முதல் ஷிப்டில் 20 பெண் கைதிகளும், மதியம் வரக்கூடிய இரண்டாவது ஷிப்டில் 20 பெண் கைதிகளும் என மொத்தம் 40 பெண் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரத்தில் வழக்கம் போல அந்த பெட்ரோல் நிலையத்தில் 20 ஆண்கள் பணியில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

திமுகவை பொருத்தவரை தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளைக் அளித்தனர். ஆட்சிக்கு வந்தவுடனேயே பெண்களுக்கு இலவச பயணத்திற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பால் விலை ரூ. 3 குறைப்பு போன்ற அதிரடியான பெண்களுக்கு கைகொடுக்கும் திட்டங்களாக நடைமுறைக்கப்படுத்தினார். முதலமைச்சரின் இந்த செயல் திமுக மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. துளி போன்ற இந்த இரண்டாண்டு ஆட்சியில் கடல் போல சாதனைகளைச் செய்துள்ளோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு ஏற்றார் போல் தற்போது பெண் சிறைக்கைதிகளுக்காக இந்த பெட்ரோல் பங்க்கினை திறந்து வைத்திருப்பது, அவர்கள் வாழ்வாதாரத்திற்கான ஒரு பகுதியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேபோல் இந்த பெட்ரோல் பங்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படும் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading