தேசிய தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மெள்ள மீண்டு வருகின்றன. இந்நிலையில் ஓமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
‘B 1.1 529’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் 25 அன்று தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொரோனா வைரஸிலிருந்து ஏறத்தாழ 30க்கும் அதிகமான முறை மரபியல் மாற்றமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொற்றுக்கு ‘ஓமிக்ரான்’ என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இது சாதாரண கொரோனா தொற்றைக் காட்டிலும் 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் கர்நாடகா மாநிலத்தில் முதன் முறையாக 2 விமான பயணிகளுக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது தான்சானியாவிலிருந்து டெல்லி திரும்பிய விமான பயணி ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி வந்த பயணி தற்போது LNJP மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.