நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் தங்கு கடல் மீன் பிடிப்பிற்காக ஒரு படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் கோடியக்கரை – ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த துப்பாக்கி சூட்டில் காரைக்காலில் இருந்து சென்ற மீன் பிடி படகின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் படகில் இருந்த மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் (32) என்பவருக்கு இடது இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனை அறிந்த இந்திய கடற்படையினர் உடனடியாக உச்சப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு தகவல் அளித்தனர் .இதையடுத்து உச்சிப்புளி கடற்படை தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேரடியாக நடுக் கடலுக்கு சென்று படுகாயமடைந்த மீனவரை மீட்டு ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமுக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கடற்படை முகாமில் இருந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் படுகாயம் அடைந்த மீனவர் வீரக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அவரது உடலில் உள்ள துப்பாக்கி குண்டுகளை மருத்தவர்கள் அகற்றி வருகின்றனர்.மேலும் துப்பாக்கி சூடுபட்ட மீன் பிடி விசைப்படகில் உள்ள எஞ்சிய 9 மீனவர்களை நடுக்கடலில் இந்திய கடற்படை ரோந்து கப்பலுக்கு அருகே மீன்பிடி படகில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், “இன்று காலை சென்னையிலிருந்து ரோந்து பணிக்காக வந்துள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டிருந்த போது துப்பாக்கி குண்டுகள் மீனவர் படகு மீது பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் தொடர்ந்து ரோந்து கப்பலில் இருந்த கடற்படை வீரர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்தான காரணம் எதுவும் தெரிய வரவில்லை.