தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற செஞ்சி வார ஆட்டு சந்தையில் 4 மணி நேரத்திலேயே 6 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செஞ்சி பகுதியில் ஆடுகள் பெரும்பாலும் விவசாய நிலங்களிலும், மலைப்பகுதியிலும் மேய்க்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இதனால் செஞ்சி பகுதியில் உள்ள ஆடுகளை வாங்க தேனி,கம்பம், கிருஷ்ணகிரி,ஓசூர், ஆம்பூர், வேலூர்,சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தைக்கு விவசாயிகள் மற்றும் ஆடுகளை வளர்ப்பவர்களும் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
வெள்ளாடுகள் ஜோடி ரூ.15,000 முதல் ரூ.30,000 வரையிலும் செம்மறி ஆடுகள் ஜோடி ரூ.25,000 முதல் ரூ.30, 000 வரையிலும் குறும்பாடுகள் ஜோடி ரூ.50,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு துவங்கிய ஆட்டு சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனை அமோகமாக நடைப்பெற்றது. சுமார் 4 மணி நேரத்திலேயே ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளும் ஆடு வளர்ப்பவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு 10 ஆயிரத்திற்ககு மேற்பபட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ.5 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.







