இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுல், புஜாரா, கேப்டன் கோலி அடுத்தடுத்து தங்கள் விக்கெட் டை பறிகொடுத்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள
ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றமில்லை. முந்தைய போட்டியில் ஆடிய வீரர்களே இதில் விளையாடுகிறார்கள். அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இங்கிலாந்து அணியில் டாம் சிப்லேவுக்கு பதிலாக டேவிட் மலான், மார்க் வுட்டுக்கு பதிலாக கிரேக் ஓவர்டான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரை, இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் வீசினார்.
ஐந்தாவது பந்தில், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவர் டக் அவுட் ஆனார்., அடுத்து புஜாரா வந்தார். அவர் நிலைத்து நிற்பதற்குள், ஆண்டர்சன் வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில், கே.எல்.ராகுல் போலவே, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.
இதையடுத்து கேப்டன் விராத் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். விராத் விக்கெட்டையும் ஆண்டர்சன் சொல்லி வைத்தமாதிரியே தூக்கினார். அவரும் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டிரிங்ஸ் இடைவேளையின்போது, 12 ஓவர்களில் இந்திய அணி, இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.