இந்தியா-இலங்கை இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 13ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டிகள் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கை இடையே இலங்கையில் வரும் 13ம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுவதாக இருந்த து. இந்நிலையில் இலங்கையில் போட்டியை நடத்தும் குழுவின் அதிகாரி ஜி.டி.நிரோஷான், பயிற்சியாளர் கிரான்ட் ப்ளவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 13ம் தேதி தொடங்க இருந்த ஒரு நாள் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து போட்டிகளை தள்ளி வைக்கலாம் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து இன்று பிசிசிஐ தரப்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு மையத்திடம் ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனைக்குப் பின்னர் போட்டிகளை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இலங்கை முகாமில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியா-இலங்கை இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 18ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளார்.







