ஜிம்பாப்வே : பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் உயிரிழப்பு!

ஜிம்பாப்வேவில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஜிம்பாப்வே நாட்டின் கிழக்கு மாஷோனாலெண்ட் மாகாணம் டிமா பகுதியில் இருந்து மிட்லேண்ட்ஸ் மாகாணம் மவுமா நகருக்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்தில் 35 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் பங்கேற்க மவுமா நகருக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஹராரே மஸ்விங்கோ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்றபோது எதிரே வந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.