கோவையில் போதை கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் போதை கலாசாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது கஞ்சா சாக்லேட்டின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10 .8 லட்சம் மதிப்புள்ள, 156 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சோமனூர் அருகே சுமார் 22.5 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது தொடர்பாக பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த கடந்த நான்கு நாள்களில் மட்டும் 178 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நான்கு நாள்களில் மொத்தம் 31,000 கஞ்சா சாக்லேட்கள் (பாக்கெட்) பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து இங்கு பணி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் ஊருக்கு சென்று வரும்போது, ரயில் மூலம் இந்த கஞ்சா சாக்லேட்களை கடத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு கஞ்சா சாக்லேட்டை ரூ.50க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மில் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரை குறிவைத்து இதை விற்று வந்துள்ளனர்.
இதுபோன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், 94981-81212 மற்றும் 77081-00100 எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று காவல் துறை கூறியுள்ளது.
-ம.பவித்ரா