கடந்த மூன்று ஆண்டுகளில் “ஸ்டார்ட் அப்” திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது அதிகரித்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட எண்ணிக்கைகள் குறித்தும், நிறுவனங்களை தொடங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு குறித்தும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவதற்கும் அதனை ஒழுங்குமுறை படுத்துவதற்கு மாநில அரசுகளிடம் இருந்து ஏதேனும் விண்ணப்பம் வந்துள்ளதா? ஸ்டார்ட் அப் தமிழகத்தில் விரிவுபடுத்த மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என என்றும் திமுக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டின் 602 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,
2020ம் ஆண்டில் 755 நிறுவனங்களும், 2021ம் ஆண்டில் 1,103 நிறுவனங்களும், 2022ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை 1,501 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டில் 344 நிறுவனங்களும், 2020ம் ஆண்டில் 380 நிறுவனங்களும், 2021ம் ஆண்டில் 515 நிறுவனங்களும், 2020ம் ஆண்டில் நவம்பர் 30ம் தேதி வரை 661 நிறுவனங்களும் ஸ்டார்ட் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாகவும் எழுத்து பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க ஒதுக்கப்பட்ட முதலீடு குறித்து எந்த தகவலும் சேமிக்கப்படவில்லை என்றும், ஸ்டார்ட் அப் திட்டங்களை தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







