வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாண்டஸ் புயலாக வலுப்பெறும் என்று கூறப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு படையினரின் ஆறு குழுக்கள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தமிழக காவல்துறையைச் சேர்ந்த தேசிய நீச்சல் வீரர்கள் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த நீச்சல் வீரர்களை கொண்ட 50 பேர் அணி, மீட்பு பணி தளவாடங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புயல் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.







