ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பரிசல் இயக்க 5வது நாளாக தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளில் இருந்து 70 ஆயிரத்து 478 கனஅடி உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரமாக கனஅடியாக தண்ணீர் வந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்தது. இதனால் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்  அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 5-வது நாளாக தடை விதித்து அளித்துள்ளது. அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறி உள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.