பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, ஊட்டி மஞ்சூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி, கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் பல புதிய அரசு கலை கல்லூரிகளை தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
இன்றைய சூழலில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமாக சேருவதில்லை என்று கூறிய அவர், ஊட்டி பகுதிகளில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறைவான அளவில் மாணவர்கள் பயின்று வருவதாக தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு
மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே “நான் முதல்வன்” என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடி, தேவை ஏற்பட்டால் ஊட்டி மஞ்சூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும் 26 அரசு கலை கல்லூரிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், 55 கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








