கோவையில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட அலுவலகத்தில் வருமான வரித் துறையின் சட்டவிரோத சோதனைக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் நேற்று (செப்.13) இரவு மத்திய வருமான வரித் துறை அதிகாரிகள் ஒன்றிய பாஜக அரசின் ஏவலின் பேரில் சட்ட நடைமுறைக்கு மாறாக சோதனைகளை மேற்கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் என்பது மக்கள் சேவைக்கான மையமாகவே செயல்பட்டு வரும் நிலையில், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில், ஜனநாயகத்திற்கான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குரலை ஒடுக்கவும், மக்கள் சேவையை தடுத்து நிறுத்தவும் திட்டமிட்டு வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக சோதனை நடத்திய வருமான வரித் துறை அதிகாரிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட அலுவலத்தில் இருந்து எவ்வித ஆவணங்களையும் கைப்பற்ற முடியாமலேயே திரும்பிச் சென்றனர்.
சமீபத்தில் நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் தான் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தனித்து நின்று வெற்றி பெற்றார். அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கு கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பல்வேறு எதிர்ப்புகளை மீறி வெற்றி பெற்றது ஒன்றிய பாஜக அரசின் கண்களை அச்சுறுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த சோதனை. கட்சியின் அன்றாட அலுவல் பயன்பாடுகளை தாண்டி, எஸ்.டி.பி.ஐ. கவுன்சிலருக்கான, மக்கள் நலப்பணிகளுக்கான சேவை மையமாகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதனை திட்டமிட்டு சீர்குலைக்கவும், மக்களிடம் அவப்பெயரை உருவாக்கவுமே வருமான வரித்துறை சோதனை நடந்தேறியுள்ளது.
இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளால் ஜனநாயகத்திற்கான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நேற்றைய சோதனையில் எந்த ஆவணமும் கிடைக்காத நிலையில், கட்சியின் நிர்வாகி ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் ஒன்றை மட்டும் அளித்துள்ளனர். இந்த சம்மனை அவர்கள் முறையாக அனுப்பியிருந்தாலே எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் நேரடியாக ஆஜராகி அவர்கள் முன்வைக்கும் புகார் குறித்து விளக்கமளித்திருப்பார்கள். ஆனால், திட்டமிட்டு கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் சோதனையை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபகாலமாக அதிகரித்து வரும் இத்தகைய அடக்குமுறை ஏவல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இல்லாவிட்டால் பாஜக அரசின் பாசிச கரங்கள் நாட்டில் உள்ள ஜனநாயக ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா