வருமான வரி கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் ரூ.5000 அபராதம் செலுத்த நேரிடும் என்கின்றனர் பட்டய கணக்காளர்கள். அது குறித்து பார்க்கலாம்.
வங்கி கணக்கின் வழியாக மாதச் சம்பளம் பெறுவோரும், வருவாய் ஈட்டுவோரும், ஆண்டுக்கு ஒரு முறை வருமான வரித்துறைக்கு, வருமானம் பற்றிய விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதியாண்டுக்கான விபரங்களை, அதே ஆண்டு ஜூலை 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தான் வழக்கமான நடைமுறை. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரி கணக்கிற்கு வரி எதுவும் இல்லை. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானத்திலிருந்து வரி விதிக்கப்படுகிறது. ஒருவர் முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்துவிட்டால் அதற்கு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் சமர்ப்பிக்கப்படும் வருமான வரி கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கு இது தொடர்பாக செல்போன் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சலையும் அனுப்புகிறது.
ஜூலை 26 வரை 3.4 கோடிக்கும் அதிகமானோர் வரி தாக்கல் செய்துள்ளனர். 26ம் தேதி மட்டும் 30 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஐந்து லடசம் ரூபாய்க்கு குறைவான வருமான வரி கணக்கிற்கு ஆயிரம் ரூபாயும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமான வரி கணக்கிற்கு 5000 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
எனவே வருமான வரி செலுத்துவோர் குறித்த காலத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து அபராதத்தை தவிர்க்கலாம் என்பது வருமான வரித்துறை அதிகாரிகள் வரி செலுத்துவோருக்கு விடுக்கும் கோரிக்கையாக உள்ளது.