சென்னையில் ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மண்ணடி உள்ளிட்ட இடங்களில் தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் இருந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள், சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், ஜெய் நகர், தியாகராய நகர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆல் இந்தியா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் பென்ஷனர் அசோசியேசன் கட்டட வளாகத்தில் உள்ள அலுவலகம், வேப்பேரி ரித்தர்டன் சாலை, கோபாலபுரம் ரத்னா தெரு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று ஜவுளி கடை உரிமையாளர் வீடுகள், தொழிலதிபர்கள் வீடுகள் என சென்னையில் இரண்டாம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நீலகண்டன் மற்றும் அவருடைய சகோதரர் வெங்கடேசன் ஆகியோர் வீடு அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. மற்ற இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோபாலபுரத்தில் உள்ள பைனான்ஸியர் வினோத் கிருஷ்ணா, தியாகராய நகரின் உள்ள பைனான்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் வீடுகளிலும், வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் இரண்டாம் நாளாக சோதனை தொடர்கிறது.







