தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிலவியதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தவர் பன்வாரிலால் புரோஹித். அந்த சமயத்தில் சூரப்பா உள்பட அவரின் துணைவேந்தர் நியமனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. தமிழ்நாட்டு பல்கலைக் கழகத்திற்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமிப்பதா என கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனிடையே கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக்கழகங்களின் பணிகளில் ஆளுநர் தலையீடு குறித்த முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சத்பீர் சிங் கோசலை நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றிய போது, தனக்கு மிக மோசமான அனுபவம் ஏற்பட்டதாக அவர் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் துணைவேந்தர் பதவியை 40-முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்வதாக குற்றம்சாட்டினார். இதனை தனது பதவி காலத்தில் தடுத்து நிறுத்தி, 27 பல்கலைக்கழகங்களுக்கு சட்டவிதிப்படியே துணை வேந்தரை நியமித்தாகவும் கூறினார்.







