2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், பாட்டாளி மக்கள் கட்சித்தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கல்வித் கொள்கை உண்டு என்றார். 75 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. வறுமை , மது, போதை, சூது போன்றவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாளை சுதந்திர தினத்தில் முதலமைச்சர் பல அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும். அதில் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர செயல்திட்டம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்கின்றோம் என்ற அறிவிப்பு. போதை பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும். இவைகளை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதாக அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
காவிரி ஆற்றில் கடந்த 28 நாட்களில் 151 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து இருக்கிறது. 55 ஆண்டுகால திராவிட ஆட்சியில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். 50 தடுப்பணைகளாவது கட்டி இருக்க வேண்டும். வாக்குகான இலவசங்கள் வேண்டாம். வளர்ச்சிக்கான கல்வி, சுகாதாரம், விவசாய இடுபொருட்கள் போன்ற இலவசங்கள் தேவை. தமிழக கடன் 11 லட்சத்து 68 ஆயிரம் கோடி கடனுக்கு ஆண்டுக்கு 97 ஆயிரம் கோடி வட்டியாக மட்டும் கட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 20 நீர்பாசன திட்டங்கள் நிலுவையில் உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பல அழுத்தங்கள் கொடுத்தோம். அதன்படி அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை கொண்டு வந்தார்கள். அப்போது ஒருவர் கூட உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. தடை நீக்கிய பிறகு ஒராண்டில் மட்டும் 28 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். காவல்துறை நினைத்தால் போதை பொருட்களை தடுக்கலாம். விற்பவர்கள் யார் என காவல்துறைக்கு தெரியும். போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
போதை பொருட்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். திராவிட கட்சிகள் மதுவை கொண்டு வந்து இளைய தலைமுறையினரை சீரழித்து உள்ளனர். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், மதுவை விற்று தான் ஆட்சியை நடத்த வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி பா.ம.க தான் அரசை செயல்படுத்தி வருகிறோம்.
மக்கள் பிரச்சனையை அரசுக்கு சொல்லி தீர்வு கண்டு வருவதாக கூறிய அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் என்றார். அதற்கேற்ற யூகங்களை 2024 ல் அமைப்போம் என கூறினார். தமிழ்நாடு நிதி அமைச்சர் மீது செருப்பு வீசியது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
– இரா.நம்பிராஜன்