முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 9 ஆவது கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி, 8 ஆவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் 15 நாட்களுக்குள்ளாக 9 ஆவது அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
வரும் அக்டோபர் 17 ஆம் தேதி கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிக்க உள்ளவை, புதிய மசோதாக்கள் தாக்கல் செய்தல் முதலியன குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி, டேவிதார் ஆணையங்களின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுகுறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் எதிர்க்கட்சியினர் ஆத்திரமூட்டும் வகையில் பேசினாலும், அமைதியாக பதிலளிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது, பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள், நெல் கொள்முதல் உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.







