சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – சாத்தூரில் 3 உயிர்கள் பலி!

சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக வீட்டின் உரிமையாளரான பொண்ணுப்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துயரமான சம்பவம் பொண்ணுப்பாண்டி என்பவரது வீட்டில் நடைபெற்றது. சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய வெம்பக்கோட்டை போலீசார், வீட்டின் உரிமையாளர் பொண்ணுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது, உயிரிழப்புக்குக் காரணமானது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதன் அபாயத்தையும், அதனால் ஏற்படும் கடுமையான விளைவுகளையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.