அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகளுக்கு தி.மு.க அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் தனியாரை நுழைத்தால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதுமிருந்தால் தி.மு.க அரசு அதைக் கைவிட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
தொடர் நஷ்டம் மற்றும் கடன் செலவுகளை குறைக்க போக்குவரத்துத் துறையின் பேருந்துகளை இயக்கும் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து கழக பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வலியுறுத்தி உள்ளார்.








